பாட்டி இறந்த நாளில் பேரனும் பலியான சோகம்
முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தட்டான்குடியிருப்பு கிராமத்தில் இறந்த பாட்டி கிருஷ்ணம்மாள் உடலை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது அவரது பேரன் சோலைமலை மின்சாரம் தாக்கி பலியானார்.தட்டான்குடியிருப்பை சேர்ந்த கிருஷ்ணம்மாள் 75, நேற்று உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். அவரது பேரன்முறை உறவினரான சோலைமலை 42, கொடுமலுார் பகுதியில் இருந்து வாடகைக்கு குளிர்சாதன பெட்டி எடுத்து வந்து மதியம் 12:00மணிக்கு வீட்டில் வைத்து மின் இணைப்பு கொடுத்த பின் பெட்டியை தொட்ட போது மின்சாரம் தாக்கி காயமடைந்து மயங்கி விழுந்தார். அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது சோலைமலை உயிரிழந்ததாக தெரிவித்தனர். இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர். கீழத்துாவல் போலீசார் விசாரிக்கின்றனர்.