பரமக்குடி அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி
பரமக்குடி; பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 6 நாள் புத்தாக்க பயிற்சி முகாம் துவங்கியது. முதல்வர் ராஜா தலைமை வகித்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது மாணவர்கள் கல்வி, ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விளையாட்டு திறன்களை மேம்படுத்தி, உயர் கல்வியில் அரசு வழங்கும் திட்டங்களை பெற்று கல்வியை முறையாக பயில வேண்டும் என்றார். பரமக்குடி மகளிர் மற்றும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராதா, இளஞ்செழியன் கலந்து கொண்டனர். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகள் குறித்தும், சிகை மற்றும் ஆடை கட்டுப்பாடுகள் பற்றியும் பேசினர். கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், டவுன் எஸ்.ஐ., சண்முகவேல் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.