தலை கீழாக இருந்த அறிவிப்பு பலகை வர்ணம் பூசி புதுப்பிப்பு
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே தேரிருவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைகீழாக இருந்த அறிவிப்பு பலகை சரி செய்யப்பட்டு வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டது.முதுகுளத்துார் தேரிருவேலி போலீஸ் ஸ்டேஷன் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு தேரிருவேலி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து காய்ச்சல், சளி, பாம்புகடி உள்ளிட்ட முதலுதவி சிகிச்சைக்காகவும், கர்ப்பிணிகள் பரிசோதனைக்காகவும் வந்து செல்கின்றனர். வளாகத்தில் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திட்டங்கள், சிகிச்சை முறை குறித்தும் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை தலைகீழாகவும், துருப்பிடித்து இருந்தது. இதனால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக வளாகத்தில் தலைகீழாக இருந்த அறிவிப்பு பலகை சரி செய்யப்பட்டு புதிதாக வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டது.