உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
தேவிபட்டினம்: மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் உப்பளத் தொழிலின்றி வேலை இழந்துள்ள உப்பளத் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளான தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, சம்பை, கோப்பேரிமடம், நதிப்பாலம், வாலிநோக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் உப்பள பாத்திகள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றன.இப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு அயோடின் கலக்கப்பட்டு உணவு பொருள்களின் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு கருவாடு மற்றும் தோல் பதனிடுதல் உள்ளிட்ட பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றன. வெயில் சுட்டெரிக்கும் கோடை காலங்களில் உப்பு உற்பத்தி அதிகரிப்பதும், மழைக்காலத்தில் ஐந்து மாதங்கள் உப்பு உற்பத்தி பாதிக்கப்படுவதும் வழக்கம்.மாவட்டத்தில், அக்., மாதம் முதல் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. மாவட்டத்தில் உப்பளத் தொழிலில் ஈடுபட்டு வந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே தொழிலின்றி வேலை இழந்துள்ள உப்பளத் தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பணி பாதிக்கப்பட்ட மாதங்களுக்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என உப்பளத் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.