மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு காட்சி பொருளான தொட்டி
திருவாடானை : திருவாடானை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி பயன்பாடில்லாமல் காட்சி பொருளாகியுள்ளது. குடிநீர் தடுப்பாட்டால் வெளியே விலை கொடுத்து வாங்கி மக்கள் சிரமப்படுகின்றனர்.திருவாடானையில் அரசு மருத்துவமனைக்கு தினமும் 300 க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 40 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.நீர்த்தேக்க தொட்டியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் ஏற்றுவதில்லை. சிநேகவல்லிபுரம் மக்கள் கூறியதாவது:இந்த மருத்துவமனையில் குடிநீர் கிடைக்காமல் நோயாளிகள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். சாப்பிட்டு கை கழுவக் கூட தண்ணீர் கிடைக்கவில்லை. நோயாளிகளுக்கு துணையாக வருபவர்கள் கடைக்கு சென்று பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி வருகின்றனர். தற்போது இந்த நீர்த் தேக்க தொட்டி சேதமடைந்து கம்பிகள் வெளியில் தெரிகிறது. இத்தொட்டியை அகற்ற வேண்டும்.மருத்துவமனைக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.