பெரிய கண்மாய் பாசன மடைகளுக்கு செல்லும் ரோட்டை காணோமுங்க; கருவேல மரங்களை அகற்றி சீரமைக்க வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம் : தமிழகத்தின் 2வது பெரியகண்மாய் என அழைக்கப்படும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் 20 பாசன மடைகளுக்கு செல்லும் ரோடு பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாகியும், கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. பருவமழை துவங்க உள்ளதால் கருவேல மரங்களை அகற்றி, ரோட்டை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். தமிழகத்தின் 2வது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெயர் பெற்றது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். இக்கண்மாயில் தேக்கப்படும் 1205 மில்லியன் கன அடி தண்ணீர் மூலம், 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. இந்த கண்மாய், 2008 இல் நபார்டு வங்கி உதவியுடன் துார்வாரப்பட்டு, சேதமடைந்த பாசனமடைகள் சீரமைப்பு செய்யப்பட்டது. மேலும், பாசனம் மடைகளுக்கு விவசாயிகள் எளிதாக சென்று வரும் வகையில், கண்மாய் கரையில் கிராவல் ரோடு அமைக்கப்பட்டது. இதனால், 20 பாசனம் மடைகளுக்கும் விவசாயிகள் எளிதாக சென்று வரும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பாசனம் மடைகளுக்கு செல்லும் ரோட்டை முறையாக சீரமைப்பு செய்யப்பட்டதன் காரணமாக, ரோடு சேதம் அடைந்து விவசாயிகள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், ரோட்டின் இரு ஓரங்களிலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து வருவதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மழைக்காலம் துவங்கும் முன்பாக பாசனம் மடைகளுக்கு செல்லும் ரோட்டை சீரமைப்பு செய்வதுடன், இரு ஓரங்களிலும் உள்ள கருவேல மரபுதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் வலியுறுத்தினர்.