புதிய மின்வாரிய அலுவலகம் கட்டப்படுவது எப்போது
கமுதி: கமுதியில் மின்வாரிய அலுவலகம் கட்டடம் சேதமடைந்து சீமை கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர்மண்டி ஆபத்தான நிலையில் உள்ளதால் புதிய அலுவலக கட்டடம் கட்டுவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.கமுதி கோட்டைமேடு அருகே துணைமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் கமுதி எட்டுக்கண் பாலம் அருகே மின்வாரிய உதவி மின்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடம் கட்டப்பட்டது. கமுதி தாலுகாவில் 5000 வீடுகளுக்கும் மேல் மின்சப்ளை செய்யப்படுகிறது. தாலுகா மக்கள் மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மின்வாரிய அலுவலகம் வந்து செல்கின்றனர். எட்டுக்கண் பாலம் அருகே ரோடு அகலப்படுத்துதல், பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரோடு உயர்ந்து மின்வாரிய அலுவலகம் பள்ளமான இடத்தில் உள்ளது.மேலும் கட்டடம் தற்போது வரை முறையாக பராமரிப்பு பணி செய்யப்படாததால் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. மின்சாதன பொருட்களையும் பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. மழைக்காலத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தினந்தோறும் அலுவலகத்திற்கு வரும் பணியாளர்கள், மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே ஆபத்தான நிலையில் உள்ள பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டவும், தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.