குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த நம்பரை பஞ்., மோகனாவரம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில், தனா புளூ மெட்டல் என்ற பெயரில், கல் குவாரி இயங்கி வருகிறது. தற்போது குவாரியை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறது. இதனால் விவசாயம் அழிந்தும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்தும் வருகிறது.இந்த கல் குவாரியை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 25ல், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதை கண்டித்து, கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.