தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தல்
மேட்டூர், மேட்டூர் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறையில், 4 பெண்கள் உள்பட, 48 தொகுப்பூதிய பணியாளர்கள், 20 ஆண்டுக்கு மேலாக பணிபுரிகின்றனர். ஏற்கனவே, 65 பேர் வேலை செய்த நிலையில், பணி நிரந்தரம் செய்யாததால், 17 பேர் எந்த பணப்பலனும் கிடைக்காமல் ஓய்வு பெற்றனர். தமிழகம் முழுதும் பல்வேறு அரசு துறைகளில், 3,448 தொகுப்பூதிய பணியாளர்கள் பல ஆண்டாக பணிபுரிகின்றனர்.நேற்று காலை, மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசன நீரை திறந்து வைத்து, முதல்வர் ஸ்டாலின் புறப்பட்ட பின், அமைச்சர் துரைமுருகன், அரங்கத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த நீர்வளத்துறை தொகுப்பூதிய பணியாளர்கள், 'நாங்கள், 30 ஆண்டாக தொகுப்பூதியத்தில் பணிபுரிகிறோம். அரசு பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு அவர், 'இதுதொடர்பாக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்' என்றார்.