கனரக லாரிகளால் குடிநீர் குழாய் சேதம்
பனமரத்துப்பட்டி, ஆக. 25-சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை சந்தியூர் பிரிவில் மேம்பால கட்டுமானப்பணி நடக்கிறது. அதற்கு மூக்குத்திப்பாளையம் ஏரியில் இருந்து மொரம்பு மண் எடுத்துக்கொள்ள, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஏரியில் மண் பாரம் ஏற்றிய கனரக டிப்பர் லாரிகள், அம்மாபாளையம் வழியே, பாலப்பணி நடக்கும் இடத்துக்கு செல்கின்றன. ஆனால் லாரிகளில் ஏற்றப்படும் அதிக பாரத்தை தாங்க முடியாமல் கிராம சாலைகள் சேதமடைகின்றன. தார்ச்சாலை அடியில் உள்ள குடிநீர் குழாயும் நசுங்கி விடுகிறது. குறிப்பாக சேலம் - கரூர் ரயில் பாதை அருகே மண் பாரம் ஏற்றிச்சென்ற லாரிகளால், வாணியம்பாடி நீருந்து நிலையத்தில் இருந்து பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்துக்கு செல்லும் குழாய் நசுங்கி தண்ணீர் வெளியேறுகிறது. அதனால் சாலை, குடிநீர் குழாய் சேதமடையாதபடி, மண் பாரம் ஏற்றிச்செல்ல, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.