| ADDED : ஜூன் 14, 2024 01:58 AM
மேட்டூர், பள்ளிக்கு முடி வெட்டாமல் வந்த, 30 மாணவர்களை, தலைமை ஆசிரியர் வெளியே அனுப்பினார்.சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 700 பேர் படிக்கின்றனர். குறிப்பாக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவ, மாணவியர் ஒன்றாக படிக்கின்றனர். அந்த இரு வகுப்புகளில் பெரும்பாலான மாணவர்கள் முடிவெட்டாமல் ஸ்டைலாகவும், ஒரு புறம் மட்டும் தலையை கோடு போட்டு சீவியும் பள்ளிக்கு வந்தனர். அவர்களை முடிவெட்டி வரும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தினர். ஆனால் நேற்று, 30 மாணவர்கள், 'புள்ளிங்கோ ஸ்டைல்' எனக்கூறி முடி வெட்டாமல் காலை பள்ளிக்கு வந்தனர். அவர்களை முடி வெட்டி வருமாறு அறிவுறுத்தி, தலைமை ஆசிரியர் வெளியேற்றினார். அவர்கள், அருகே உள்ள மேட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று முறையிட்டனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தில் விளக்கம் கேட்ட போலீசார், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, 22 மாணவர்கள் முடியை வெட்டிக்கொண்டு, பின் பள்ளிக்கு வந்தனர். சில மாணவர்களுக்கு முடி வெட்டிக்கொள்ள, ஆசிரியர்களே பணம் வழங்கினர். தலைமை ஆசிரியர் கிலாடில் லிசாமேரி(பொ) கூறுகையில், ''கல்வித்துறை மாணவர்கள், 12 விதிமுறைகளை கடைப்பிடிக்க, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படியே மாணவர்களை முடிவெட்டி வர அனுப்பி வைத்தோம்,'' என்றார்.