மேட்டூர்:மேட்டூர் அணை, 43ம் முறையாக நிரம்பிய நிலையில், பாசனம், உபரியாக வினாடிக்கு, 81,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் கடந்த, 3ல், 39.74 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று மாலை முழு கொள்ளளவான, 120 அடியை எட்டியது. நீர்வரத்து அதிகரித்த நிலையில், 27 நாட்களில் அணை நிரம்பியது.அணையில், 1934 முதல், பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. 90 ஆண்டுகளில், 43ம் ஆண்டாக நேற்று, அணை முழு கொள்ளளவை எட்டியது. மாலை, 5:30 மணிக்கு நிரம்பிய நிலையில் உபரிநீர் வெளியேற்றும், 16 கண் மதகு வழியே முதல்கட்டமாக, 24,500 கனஅடி; இரவு, 7:00 மணிக்கு, 44,500 கனஅடி; 8:00 மணிக்கு, 60,000 கனஅடி என, உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.தவிர அணை, சுரங்க மின் நிலையங்கள் வழியே பாசனத்துக்கு, 21,500 கனஅடி நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்படுகிறது. அணை பாசன நீர், உபரி நீரை சேர்த்து, இரவு, 8:00 மணிக்கு, 81,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.அதேநேரம் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து வினாடிக்கு, 1.90 லட்சம் கனஅடி உபரிநீர், தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இந்த நீர் வந்தால் மேட்டூர் அணை உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கும்.