மக்கள் நீதிமன்றத்தில் 4,277 வழக்குக்கு தீர்வு
சேலம்: சேலம் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சேலம், சங்ககிரி, ஆத்துார், மேட்டூர், ஓமலுார், ஏற்காடு, வாழப்பாடி, இடைப்பாடி நீதிமன்றங்களில், 17 அமர்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தொடங்கி வைத்தார்.அதில் சேலம், ஜங்ஷனை சேர்ந்த கிருஷ்ணன், 55, கடந்த, 2021ல், திருவாக்கவுண்டனுாரில் பைக்கில் சென்றபோது விபத்துக்குள்ளாகி, 'கோமா' நிலைக்கு சென்றார். உறவினர்கள் யாருமின்றி, அவரை, 4 ஆண்டுகளாக நண்பர் மாரி முரளிதரன் பராமரித்து வந்தார். இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில், மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது. அதன்படி அவருக்கு, 55 லட்சம் ரூபாய் காசோலையை, முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.அதேபோல் விபத்தில் ஒரு காலை இழந்த ஆத்துாரை சேர்ந்த சுபாஷ், 20, என்பவருக்கு 22.30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. மொத்தம், 5,378 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், 4,277 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 45.27 கோடி ரூபாய் தீர்வுத்தொகை வழங்கப்பட்டது.