வாழப்பாடி:சேலம் மாவட்டம் வாழப்பாடி, துக்கியாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாந்த், 27, கொத்தனார். இவரது வீட்டுக்கு, தனியார் வங்கி பெண் ஊழியர், கடந்த ஏப்., 30ல் வந்தார். பின், 'பிரசாந்த் தவணைத்தொகை செலுத்தவில்லை' என கூறி, அங்கிருந்த அவரது மனைவி கவுரிசங்கரியை, வங்கிக்கு அந்த ஊழியர் அழைத்து சென்றார். இதுகுறித்து, வாழப்பாடி போலீசில் பிரசாந்த் புகார் அளித்தார். பின் போலீசார், அந்த வங்கிக்கு சென்றனர். அங்கு கவுரிசங்கரியை மீட்ட போலீசார், வங்கிக்கு அவரை அழைத்து வந்த ஊழியரை எச்சரித்தனர். பின், பிரசாந்துடன், கவுரிசங்கரியை போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் கூறியதாவது:வாழப்பாடி அரசு மருத்துவமனை அருகே உள்ள, ஐ.டி.எப்.சி., வங்கியில் பிரசாந்த், நான்கு மாதங்களுக்கு முன், 35,000 ரூபாய் கடன் வாங்கினார். அதை வாரந்தோறும், 770 ரூபாய் வீதம், 52 வாரங்கள் செலுத்தும் படி பெற்றுள்ளார். ஆனால், முறையாக கட்டவில்லை என, வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், தனியார் வங்கி பெண் ஊழியர், தவணை செலுத்தக்கோரி, பிரசாந்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டார்; அவர் அழைப்பை பிரசாந்த் ஏற்கவில்லை. இதனால் பெண் ஊழியர், வீட்டுக்கு வந்தார். அப்போது பிரசாந்த் இல்லை.இதனால், 'வங்கிக்கு வந்து பணத்தை கட்டி விட்டு மனைவியை கணவர் அழைத்துச் செல்லட்டும்' என கூறி, கவுரிசங்கரியை அழைத்து சென்றார்.இதுகுறித்து பிரசாந்த், வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வங்கி ஊழியரை எச்சரித்து, பிரசாந்துடன் கவுரிசங்கரியை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். பின், பிரசாந்த் தவணைத்தொகையை செலுத்திவிட்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆர்.பி.ஐ., விதிகளை மீறும் வங்கிகள்
கடன் பெற்ற வாடிக்கையாளர் தவிப்புரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், இந்த வழிகாட்டுதல்களை சரிவர கடைபிடிக்காமல், வாடிக்கையாளர்களை மிரட்டுவதும், அசிங்கமாக பேசுவதும் என்ற செயல்களில் ஈடுபடுவதாக, கடன் பெற்றவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்இது குறித்து, வாடிக்கையாளர்கள் சிலர் கூறியதாவது:வங்கிகளில் தனி நபர் கடன் பெற்று, மாதாமாதம் தவணை தொகையை சரியாக செலுத்துகிறோம். சில நேரங்களில் தவணை செலுத்தும் நேரம் தள்ளிப்போகிறது. ஆனால், வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி, சில ஏஜன்ட்டுகள் தவறாக பேசுகின்றனர். பணம் செலுத்துகிறோம் என்றாலும், நாங்கள் சொல்லும் நேரத்தில் தான் பணம் செலுத்த வேண்டும் என மிரட்டுகின்றனர். மனவேதனைக்கு உள்ளாக்குகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வாடிக்கையாளர் நலனை மட்டும் வங்கி நிர்வாகம் கருதி செயல்படுகிறது. யாரையும் கெடுபிடி செய்து பணம் வசூல் செய்ய வேண்டும் என, எந்த வங்கியும் கட்டாயப்படுத்துவது கிடையாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், கடன் வசூலிக்கும் நேரத்தை தாண்டி தவறாக நடந்து கொண்டால், cms.rbi.org.in என்ற இணையதளம் வாயிலாக புகார் அளிக்கலாம்.