உதவி மையத்தில் 2 நாளில் 60 மாணவர் விண்ணப்பம்
ஓமலுார், தமிழகம் முழுதும் அண்ணா பல்கலை சார்பில், பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, மாவட்டம் வாரியாக அரசு பொறியியல் கல்லுாரிகளில் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரியில் நேற்று முன்தினம், உதவி மையம் தொடங்கப்பட்டது. அங்கு, 30 கணினிகளுடன், தனித்தனியே ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். அவர்கள், விண்ணப்பிக்க வரும் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ் பதிவேற்றம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இரு நாளில், 60 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு கல்லுாரி முதல்வர் விஜயன் பதிவு செய்யப்பட்ட ஒப்புகை சீட்டுகளை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் உடனிருந்தார்.