அமைச்சரை பதவி நீக்க வலியுறுத்தி அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்
ஆத்துார்: அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் அறிக்கை: பெண்கள், தாய்மார்களை, தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி.,க்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருகின்றனர். சமீபத்தில் அமைச்சர் பொன்முடி, ஹிந்து மதம், பெண்களை அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். அவரை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதோடு, பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரி, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஆத்துார் நகராட்சி அலுவலகம் எதிரே, ஏப்., 22(நாளை) காலை, 10:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.அதில், புறநகர் மாவட்டத்தில் இருந்து, 8,000 மகளிர் பங்கேற்க உள்ளனர். மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா தலைமை வகிப்பார். மாவட்ட செயலரான நான், கொள்கை பரப்பு துணை செயலர் கவுதமி, கண்டன உரை நிகழ்த்துகின்றனர். அமைப்பு செயலர் சீனிவாசன், எம்.எல்.ஏ.,க்களான ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, ஏற்காடு சித்ரா, மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணியினர் பங்கேற்பர். அமைச்சருக்கும், தி.மு.க., அரசுக்கும் கண்டனம் தெரிவித்து, கறுப்பு ஆடை அணிந்து மகளிர், கட்சியினர் பங்கேற்பர்.