ஆட்டுச்சந்தைக்கு தடை: போலீஸ் பாதுகாப்பு
தலைவாசல், தலைவாசல் அருகே வீரகனுாரில், சனிதோறும் ஆட்டுச்சந்தை நடக்கிறது.அங்கு சுங்க கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக கூறி, வியாபாரிகள் தெடாவூரில் ஆட்டுச்சந்தை நடத்தினர். இதுதொடர்பாக, வீரகனுார் டவுன் பஞ்சாயத்து ஒப்பந்ததாரர் ரமேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம், தெடாவூரில் அனுமதியின்றி ஆட்டுச்சந்தை நடத்தக்கூடாது என, உத்தரவிட்டது.நேற்று முன்தினம், தெடாவூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் யவனராணி, தெடாவூரில் ஆட்டுச்சந்தை நடத்த அனுமதி இல்லாததால், போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, மனு அளித்தார். அதன்படி நேற்று, கெங்கவல்லி போலீசார், சந்தை கூடிய இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சில வியாபாரிகள், சந்தைக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் போலீசார், வருவாய்த்துறையினர் எச்சரித்ததால், வியாபாரிகள் வீரகனுாருக்கு சென்றனர்.