கட்டட தொழிலாளி மர்ம மரணம்; உறவினர்கள் குற்றச்சாட்டு
சேலம் : சேலம் மாவட்டம் கருப்பூர் அருகேயுள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் அஜித், 28, கட்டட தொழிலாளி. கடந்த 30ல், கருப்பூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி குதித்தார். படுகாயமடைந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். உடலை பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் அனுமதிக்காததால், கருப்பூர் போலீசார் பேச்சு நடத்தி சமாதானம் செய்தனர்.அஜித்தின் உறவினர்கள் கூறியதாவது: அஜித் தன் உறவினருடன், ஸ்கூட்டியில் சென்ற போது, கருப்பூர் போலீசார் நிறுத்தினர். இருவரும் போதையில் இருந்ததால் மொபட்டை பறிமுதல் செய்தனர். 'மொபட் உறவினருடையது. திருப்பி வழங்குங்கள். இல்லையேல் தற்கொலை செய்து கொள்வேன்' என அஜித் கூறியதாக கூறப்படுகிறது.போலீசார் இதை கவனத்தில் கொள்ளாத நிலையில், தண்ணீர் தொட்டி மீது ஏறி குதித்ததில் இறந்து விட்டார். இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.இதுகுறித்து சூரமங்கலம் உதவி கமிஷனர் நிலவழகன் கூறுகையில், “அஜித் போதையில் இருந்ததால், போலீசார் வாகனத்தில் அழைத்து வரவில்லை. அவர் நடந்து வந்த வீடியோ பதிவு உள்ளது. மொபட்டை பறித்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது பொய். ''இதுகுறித்து அவர்களின் உறவினர்களிடம் விளக்கமாக கூறி விட்டோம்,” என்றார்.