போலி ஆவணத்தில் பத்திரப்பதிவு சார் - பதிவாளர், 9 பேர் சிக்கினர்
சேலம்: போலி ஆவணம் மூலமாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், சார் - பதிவாளர் உட்பட, 10 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். சேலம் மாவட்டம், மெய்யனுாரை சேர்ந்தவர் பெரியபெருமாள், 73; சேலம் எஸ்.பி., கவுதம் கோயலிடம் அளித்த மனு: இடங்கணசாலையில், தாய் கந்தாயி பெயரில், 13.75 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம், 2022ல் மகுடஞ்சாவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில், சகோதரரான கந்தசாமி, அவரது மகன்கள் மாணிக்கம், அருணாசலம், தான செட்டில்மென்ட் கிரயம் செய்துள்ளனர். இதற்கு போலியாக இறப்பு, வாரிசு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. சார் - பதிவாளர், துணை தாசில்தார், வி.ஏ.ஓ., உடந்தையாக இருந்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. எஸ்.பி., உத்தரவுப்படி, மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரித்ததில், போலி ஆவணம் தயாரித்தது உறுதியானது. மாணிக்கம், அருணாசலம், உடந்தையாக இருந்த ராஜா, இடங்கணசாலை வி.ஏ.ஓ., கோபால், சங்ககிரி துணை தாசில்தார் ஜெயகுமார், பத்திர எழுத்தர் செந்தில்குமார், சிவக்குமார், பொன்னுசாமி, அப்போதைய மகுடஞ்சாவடி சார் - பதிவாளர் கோவிந்தசாமி உட்பட, 10 பேர் மீது, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.