டெல்லி தேசிய தர நிர்ணய குழு டாக்டர்கள் ஓமலுார் அரசு மருத்துவமனையில் ஆய்வு
ஓமலுார்: தேசிய தர நிர்ணய குழு டாக்டர்கள், ஓமலுார் அரசு மருத்துவமனையில் ஆய்வு பணியை துவக்கினர்.சேலம் மாவட்டம், ஓமலுார் அரசு மருத்துவமனையில் தினமும், 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. தற்போது மருத்துவமனையில், 120 படுக்கை வசதிகள் உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் என, 80க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இங்கு அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் குறித்து அறிந்து, அதற்கு தேசிய தர சான்று வழங்கிட, டெல்லியிலிருந்து தேசிய தர நிர்ணய குழு டாக்டர்கள் அஜய்குமார், சவிதா, நாகேந்திர கவுலா ஆகியோர், நேற்று காலை மருத்துவமனை வந்தனர்.அக்குழு முதன்மை மருத்துவர் அலுவலகத்தில், ஓமலுார் டாக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். தொடர்ந்து மருத்துவமனையில் செயல்பட்டு வரும், 13 துறைகளை, தேசிய தர நிர்ணய குழு டாக்டர்கள் தனித்தனியே ஆய்வு பணியை துவக்கினர். முதற்கட்டமாக நேற்று, உள்நோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, பிரசவத்துக்கு பின்பு உள்ள சிகிச்சை பிரிவுகளை ஆய்வு செய்தனர். ஓமலூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ஹெலன் குமார் உடனிருந்தார்.இன்று இரண்டாம் நாள் ஆய்வு பணி மேற்கொள்கின்றனர்.