குழந்தை இறப்புக்கு காரணம் மின்வாரியம், தோட்ட நிர்வாகம்
ஏற்காடு:சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்பவர், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பக்னுசோய், 35. இவரது மனைவி பெலோசோய், 34. இவர்களது, 3வது மகன், லபாடா சோய், கடந்த, 4ல் மின்சாரம் தாக்கி இறந்தார். ஆனால் போலீசாருக்கு தெரிவிக்காமல், அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில், உடலை புதைத்தனர். இதனால், வி.ஏ.ஓ., வைஷ்ணவி புகார்படி, ஏற்காடு போலீசார் விசாரித்தனர்.தொடர்ந்து நேற்று மதியம், சேலம் அரசு மருத்துவர் கோகுலரமணன் முன்னிலையில் குழந்தை உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்தனர். அதில் குழந்தை இடது கையில் மின்சாரம் தாக்கி காயம் அடைந்ததற்கான அறிகுறி இருந்ததால், மின்சாரம் தாக்கி இறந்தார் என உறுதியானது. இருப்பினும் அடுத்த கட்ட ஆய்வுக்கு, குழந்தை உடல் உறுப்புகளில் சிலவற்றை, மருத்துவ குழுவினர், சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர்.எஸ்டேட் மேலாளர் சுனில் கூறுகையில், ''சம்பவ இடத்தில் மின் கம்பி தாழ்வாக செல்வதாக, 6 மாதங்களுக்கு முன் மின்வாரியத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எஸ்டேட் உள்ளே மின்மாற்றி உள்ளதால், தேவைப்படும் நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து வேண்டிய வேலைகளை செய்து கொள்ளும் நிலை உள்ளது. இதனால் தான் சிறுவன் இறந்தபோது, அறுந்து கிடந்த மின் கம்பியை சரிசெய்தோம்,'' என்றார்.மேலும் தனியார் தோட்ட நிர்வாகம் மின்சாரத்தை அணைத்து பயன்படுத்துவதை கண்டுகொள்ளாமல், மின் வாரியமும் அலட்சியமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.