கோழிப்பண்ணை கழிவில் மட்கிய உரம் தயாரிப்பது எப்படி?
வீரபாண்டி,- கோழிப்பண்ணை கழிவில் இருந்து மட்கிய உரம் தயாரிக்கும் வழிமுறை குறித்து வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.இதுகுறித்து சேலம் மாவட்டம் வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை:கோழி பண்ணைகளில் தரையில் இருந்து 510 செ.மீ., உயரத்தில் உலர்ந்த பயிர் கழிவுகளை அடுக்குகளாக பரப்பி, அதன் மீது கோழிகளை வளர்த்து அதன் எச்சங்களை சேகரிக்க வேண்டும். 3 மாதங்களுக்கு பின் ஓரளவு சிதைந்த பயிர்கழிவு, கோழி பண்ணை கழிவுகளை எரு கொட்டகைக்கு மாற்றி நிழலில் குவித்து வைக்க வேண்டும். இதை, 15 நாட்களுக்கு ஒருமுறை கிளறி விட்டு வந்தால், 120 நாட்களில் தரமான மட்கிய உரம் கிடைக்கும்.முதிர்ந்த எரு அதிக கனமின்றி நயமாக இருக்கும். எரு குவியல் மட்குவதற்கு தேவையான வெப்பம் கிடைக்க கழிவின் எடை குறைந்தபட்சம் ஒரு டன் அளவில் இருப்பது அவசியம். இந்த உரத்தில் தழைச்சத்து, 2.13 சதவீதம், மணிச்சத்து, 2.40, சாம்பல் சத்து, 2.03, கரிம தழைச்சத்து, 14.02 சதவீத சத்துக்கள் இருக்கும். இதை ஹெக்டேருக்கு, 6 டன் அளவில் அனைத்து வகை பயிர்களுக்கும் அங்கக உரமாக பயன்படுத்தலாம். இந்த வழிமுறைகளை பின்பற்றி உரம் தயாரித்து விவசாயிகள் பயன்பெறலாம்.