நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அறிவே கடவுள்
சேலம்: கவிஞர் வைரமுத்து எழுதிய, 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' புத்தகத்தின் கையெழுத்து திருவிழா, வெற்றித்தமிழர் பேரவை சார்பில், சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கலையரங்கத்தில் நேற்று நடந்தது. சோனா கல்லுாரி தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் சிவசுந்தரம், சேலம், பிசினஸ் நெட் ஒர்க் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் கோபிநாத் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளரான கவிஞர் வைரமுத்து பேசியதாவது:தமிழர்களின் அனைவரது சொத்து திருக்குறள். அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவே உரை எழுதினேன். 2,000 ஆண்டுக்கு முன் எழுதப்பட்டது. அடுத்த, 2,000 ஆண்டுகளை கடந்தும் ஒப்பிட்டு பார்க்க முடியும் அற்புதமான நுால். என் உரை நுாலில், கடவுள் வாழ்த்துக்கு பதில் அறிவு வணக்கம் எழுதியுள்ளது ஏன் என, இங்குள்ள சிலர் கேள்வி எழுப்பினர். அறிவு வேறு; கடவுள் வேறு கிடையாது. நம்பிக்கை உடையவர்களுக்கு அது கடவுள். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அறிவே கடவுள் என்பதால், இப்படி எழுதியுள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து வைரமுத்து எழுதிய திருக்குறள் உரை நுால் புத்தகத்தை வாங்கியவர்களுக்கு, வைரமுத்து, அவரது கையொப்பத்தை இட்டு வழங்கினார். விழா ஏற்பாடுகளை வெற்றித்தமிழர் பேரவையின் சேலம் மாவட்ட தலைவர் செல்வரங்கம், செயலர் காமராஜ், பொருளாளர் சரவணகுமார், ஆலோசகர் புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.