சேலம் அருகே மாயமான வாலிபர் கடத்தி கொலை: 4 பேருக்கு காப்பு
சேலம், சேலம் அருகே மாயமான வாலிபர் கடத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.சேலம் வீராணம், சுக்கம்பட்டி, சின்னனுாரை சேர்ந்தவர் சதிஷ்குமார், 30, மின்வாரிய ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கபஸ்ரீ, 24. என்ற மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இவரது பாட்டி கோவிந்தம்மாள் கடந்த, 18ல் இறந்தார். இறுதி சடங்கில் கலந்து கொள்ள சதிஷ்குமார் கன்னங்குறிச்சிக்கு வந்தார். பின்னர் மது போதையில் தகராறு செய்து கொண்டிருந்தார்.தொடர்ந்து அங்குள்ள சின்னதிருப்பதி கூட்டுறவு அலுவலகம் முன் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை, இது குறித்து தாய் மலர்கொடி கொடுத்த புகார்படி, கன்னங்குறிச்சி போலீசில் அப்பகுதியில் உள்ள, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஆம்னி வேனில் வந்த 4 பேர் சதிஷ்குமாரை கடத்தி சென்றது பதிவாகி இருந்தது. இதையடுத்து வாகனத்தின் எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில், கன்னங்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் என தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் கூட்டாளிகள் மணிவண்ணன், கண்ணன், மற்றொரு மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து காரில் சதிஷ்குமாரை கடத்தி சென்றது தெரியவந்தது.அவர்களிடம் நடத்திய விசாரணையில், 18 இரவு 12:00 மணிக்கு சின்னத்திருப்பதி கூட்டுறவு அலுவலகம் அருகே வேனில் சென்ற போது, வழிமறித்து ரகளையில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்து சதிஷ்குமாரை வாகனத்தில் ஏற்றிச் சென்று, கடுமையாக தாக்கியதில் அவர் இறந்துள்ளார். இதையடுத்து, சதிஷ்குமார் உடலை ஈரோடு மாவட்டம், பவானி ஆற்றின் மேல் பகுதியில் இருந்து துாக்கி வீசியதாக தெரிவித்தனர்.இதையடுத்து உதவி கமிஷனர் அஸ்வினி, இன்ஸ்பெக்டர் சுபாஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார், பவானி ஆற்றில் உடலை தேடும் பணியில் ஈடுபட்ட போது, கடந்த இரு நாட்களாக கிடைக்காத நிலையில் நேற்று மதியம், 2:00 மணிக்கு சதிஷ்குமாரின் உடலை மீட்டனர்.இது தொடர்பாக கன்னங்குறிச்சி பிரபல ரவுடி மணிகண்டன், 39, பச்சாயி கோவில் தெரு கண்ணன், 32, மணிவண்ணன், 36, முருகன் கோவில் வட்டம் பகுதியை சேர்ந்த மற்றொரு மணிகண்டன், 36, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.