உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை போன்று எங்கள் மனுவுக்கும் முக்கியத்துவம் வேண்டும் தி.மு.க., - தலைவி பேச்சால் அதிகாரிகள் அதிர்ச்சி

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை போன்று எங்கள் மனுவுக்கும் முக்கியத்துவம் வேண்டும் தி.மு.க., - தலைவி பேச்சால் அதிகாரிகள் அதிர்ச்சி

ஓமலுார், ''உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறீர்களோ, அதேபோல் தலைவியாகிய எனக்கும், கவுன்சிலர்கள் அளிக்கப்படும் மனுக்களுக்கும், முக்கியத்துவம் கொடுங்கள்,'' என, தி.மு.க.,வை சேர்ந்த, டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி பேசியதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.சேலம் மாவட்டம் ஓமலுார் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில், கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி செல்வராணி தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம் வருமாறு:கவுன்சிலர் பெருமாள்சாமி(தி.மு.க.,): என் வார்டில் மக்களே மின்கம்பம் அமைத்து, விளக்கு வசதியை ஏற்படுத்துகிறார்கள். கவுன்சிலரான எனக்கு தெரியவில்லை.செயல் அலுவலர் சந்திரகுமார்: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மக்கள் மனு அளித்தனர். அந்த மனு மின்வாரியத்துக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைவி செல்வராணி: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறீர்களோ, அதேபோல் தலைவியாகிய எனக்கும், கவுன்சிலர்கள் அளிக்கப்படும் மனுக்களுக்கும், முக்கியத்துவம் கொடுங்கள் செயல் அலுவலரே.துணைத்தலைவி புஷ்பா (தி.மு.க.,): நாங்கள் பலமுறை மனுக்கள் கொடுத்தும், அதிகாரிகள் விளக்கு பொருத்தவில்லை. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் கொடுத்த மனுக்களுக்கு உடனே வேலை செய்கிறீர்கள். நாங்களும் முகாமில் மனுக்களை கொடுக்கலாமா?அப்போது, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து அமைதி காத்தனர். தொடர்ந்து முகாமில் பெறப்படும் மனுக்கள் விபரங்களை காட்ட வேண்டும் என தலைவி உள்ளிட்ட கவுன்சிலர்கள், அதிகாரிகளிடம் தெரிவித்தனர். பின், 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி