5,500 மரக்கன்று நடல்; முகவருக்கு பாராட்டு
ஆத்துார்: ஆத்துார், ராணிப்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார், 55. பி.எஸ்சி., பட்டதாரியான இவர், அஞ்சலக சிறுசேமிப்பு முகவராக உள்ளார். 2006ல், ஆத்துார் வெள்ளை விநாயகர் கோவில் வளாகத்தில், முதன் முதலாக மரக்கன்று நடவு செய்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் வேம்பு, புங்கன், வாகை, அரசு, ஆலம், அத்தி போன்ற மரக்கன்றுகள், பூச்செடிகளை நட்டு வந்தார். நேற்று அங்குள்ள தலைமை தபால் அலுவலக வளாகத்தில், 5,500வது மரக்கன்றை நட்டார். தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழா நடந்தது. அஞ்சல் ஆய்வாளர் சரவணசுந்தரம் உள்ளிட்ட அலுவலர்கள், சிவக்குமாரின் பணியை பாராட்டினர்.இதுகுறித்து சிவக்குமார் கூறுகையில், ''ஆக்சிஜன் அதிகளவில் வெளியிடும் மரக்கன்றுகளை வாங்கி வந்து பொது இடங்களில் நடவு செய்து வருகிறேன். இதுவரை, 5,500 மரக்கன்று நட்டுள்ளேன். தண்ணீர் ஊற்றி மரமாகும் வரை பாதுகாத்து வருகிறேன்,'' என்றார்.