| ADDED : ஜன 06, 2024 12:06 PM
மேட்டூர்: மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஜூனில் சேர்ந்த, 486 ஆண் போலீசாருக்கு வழங்கிய, 7 மாத பயிற்சி, கடந்த மாதம் நிறைவடைந்தது. அவர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று மேட்டூரில் நடந்தது. அதில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமை வகித்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை, வாகனத்தில் சென்று ஏற்றுக்கொண்டார். பின் சிறப்பாக பணிபுரிந்த காவலர் பயிற்சி பள்ளி அலுவலர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: நாட்டு நலனை எண்ணி சீர்மிகு போலீசாராக இருக்க வேண்டும். ஊர்வலம், போராட்டம், பொதுக்கூட்டம் என எது நடந்தாலும் பொறுமையுடன் இருக்க வேண்டும். நேர் கொண்ட பார்வை, கம்பீர நடை போட்ட பயிற்சி போலீசாருக்கு பாராட்டு. பயிற்சியில் பட்ட கஷ்டத்தை பாடமாக வைத்து சரித்திர சாதனை படைக்க வேண்டும். எல்லோராலும் போலீசாக முடியாது. உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டும். மக்களிடம் மரியாதையுடன் நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.பயிற்சி பள்ளி துணை முதல்வர் நாகராஜன், சேலம் மாநகர போலீஸ் தலைமையிட துணை கமிஷனர் ராஜேந்திரன், மேட்டூர் டி.எஸ்.பி., மரியமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.