கண்களில் கருப்பு துணி கட்டி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், நாமக்கல்லில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஜாகீர்உசேன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார். அதில், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். மேல் முறையீடு செய்யக்கூடாது என வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டியும், கருப்பு கொடி ஏந்தியும் கோஷம் எழுப்பினர். மாவட்ட துணைத் தலைவர் வேலு, செயலாளர் ரவி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் மயில்சாமி, முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் சங்க மாநில தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.