கொண்டைக்கடலை, வெல்லம் விற்பனை அமோகம்
சேலம், சதுர்த்தியை ஒட்டி, விநாயகருக்கு பிடித்த உணவான சுண்டல் வைத்து வழிபட்டனர். இதனால் சேலம், செவ்வாய்ப்பேட்டை, லீபஜார், பால் மார்க்கெட் மட்டுமின்றி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மளிகை கடைகளில் கொண்டைக்கடலை, வெல்லம், அரிசி, உள்ளிட்ட பொருட்கள் விற்பனை, வழக்கத்தை விட அதிகமாக நடந்தது.இதுகுறித்து சேலம் மளிகை வியாபாரிகள் கூறியதாவது: கொண்டைக்கடலையை பொறுத்தவரை வட மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரலில் வரத்து அதிகமாக இருந்தது. தற்போது விநாயகர் சதுர்த்தி, விரைவில் நவராத்திரி விழாவால், கொண்டைக்கடலை தேவை அதிகரித்து, வடமாநிலங்களில் இருந்து, 20 முதல், 30 சதவீதம் வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல் சேலம் நாமக்கல், தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வெல்லம் கொண்டு வரப்படுகிறது. இரு நாட்களாகவே, சேலம் சரகத்தில், 30 டன் அளவுக்கு கொண்டைக்கடலை, வெல்லம், பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நடந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.