ரூ.28 லட்சம் டிபாசிட் செய்ததாக நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி
ஆத்துார்:இரு வங்கிகளில், 28.37 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்ததாக, சேலம் வருமான வரித்துறை 'நோட்டீஸ்' அனுப்பியதால், அதிர்ச்சி அடைந்த தொழிலாளி, ஆத்துார் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே வளக்காபட்டைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 40, விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு, ஜன., 7ல், சேலம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து, நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.அதில், 'இரு வங்கிகளில், 2020 - 21ல், 28.37 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' வைத்துள்ளதால், அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வங்கிகளில் சேமிப்பு கணக்கு இல்லாத நிலையில், அவர் அதிர்ச்சி அடைந்தார்.தொடர்ந்து நேற்று அவர், ஆத்துார் சார்பு நீதிமன்றத்தில் அளித்த புகார் மனு:கூலி வேலைக்கு சென்றும் பிழைப்பு நடத்துகிறேன். சேலம் வருமான வரித்துறையினரிடம் இருந்து தபால் வந்தது. அதில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில், 1.37 லட்சம் ரூபாய், சேலம், தமிழ்நாடு கிராம வங்கியில், 27 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்துள்ளதாகவும், அதுகுறித்த விபரங்களும் கேட்டுள்ளனர்.நான் வசிக்கும் பகுதியில் உள்ள மலைவாழ் பல்நோக்கு கூட்டுறவு வங்கி, கருமந்துறை இந்தியன் வங்கியில் கணக்கு உள்ளது. பயிர்க்கடன், நகை கடன் மட்டும் பெற்றுள்ளேன். வருமான வரித்துறை அறிவிப்பால் கலக்கமடைந்து, மன உளைச்சலில் உள்ளேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.