கொல்லிமலையில் சிக்னல் பிரச்னை மொபைல் டவரை சீரமைக்க கோரிக்கை
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலை புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. அந்த மலையில் உள்ள தின்னனுார் நாடு பகுதியில் தாவரவியல் பூங்கா, வாசலுார் பட்டி ஏரியில் படகு சவாரி போன்றவற்றிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வாசலுார் பட்டி ஏரி அருகே, புதிதாக மொபைல் போன் கோபுரம் அமைக்கப்பட்டது. அதன் மூலம், சேத்து பலா, சோளக்கண்ணி, மங்களம், ஊர்புறம், பள்ளக்குளி, வீரகனுார், குளிப்பட்டி, ஊர்முடி போன்ற கிராம மக்கள், மொபைல் போன் சேவையை எளிதாக பயன்படுத்தி வந்தனர்.ஆனால், கடந்த, ஆறு மாதங்களுக்கு மேலாக, 'சிக்னல்' சரியாக கிடைக்காததால், மலைவாழ் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மருத்துவ உதவிக்காக, '108' அவசரகால ஆம்புலன்சை அழைக்க முடியாமல், தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மலைவாழ் மக்களின் நலன் கருதி, அனைத்து மொபைல் போன் கோபுரங்களையும் சரி செய்ய வேண்டும் என, மக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.