பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
சேலம்: சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. வரும், 14ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் வரும், 14 வரை, 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் பண்டிகை முடிந்து திரும்ப ஏதுவாக வரும், 16 முதல், 20 வரை, 750 சிறப்பு பஸ்கள், தட நீட்டிப்பு, கூடுதல் நடைகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூர்; சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு; பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஓசூரில் இருந்து சேலம், சென்னை, கடலுார், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர்; நாமக்கல்லில் இருந்து ஆத்துார், செந்தாரப்பட்டி, ராசிபுரம், மேட்டூர், திருச்செங்கோடு; தம்மம்பட்டியில் இருந்து சென்னை; ஈரோடு மற்றும் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு, திருச்சி, மதுரை, திருப்பூர்; கோவையில் இருந்து ஓசூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியர், அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம், www.tnstc.inஎன்ற இணைய தளம் வழியே முன்பதிவு செய்து பயன்பெறலாம் என, கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.