மாணவன் விஷம் குடித்து மயக்கம் பள்ளி ஆசிரியையிடம் விசாரணை
சேலம்:மாணவன் விஷம் குடித்த விவகாரத்தில், பள்ளி ஆசிரியையிடம், மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்த பள்ளத்தானுார் வடக்கு பகுதியை சேர்ந்த மாணவன், நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்து விட்டு, கூட்டாத்துப்பட்டி பஸ் ஸ்டாண்டில் மயங்கி கிடந்தார்.அருகில் உள்ளவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதல் கட்ட விசாரணையில், பள்ளியில் உள்ள ஆங்கில ஆசிரியை கண்டித்ததால், மாணவன் விஷம் குடித்ததாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டார்.இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆங்கில ஆசிரியையிடம், மாவட்ட கல்வி அலுவலர் நரசிம்மன் விசாரணை நடத்தி வருகிறார்.