சிறுகுன்றின் மேல் நிற்கும் வரலாற்று அதிசயம் அழிவை நோக்கி சுண்டக்கா பாறை
கரூர், நவ. 1-- விலைமதிக்க முடியாத வரலாற்று சின்னங்களின் ஒன்றான, சிறுகுன்றின் மேல் நிற்கும் சுண்டக்கா பாறை, போதிய பராமரிப்பு இன்றி அழியும் அபாயத்தில் உள்ளது.கரூர் மாவட்டம், குளித்தலையிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் சத்தியமங்கலம் பஸ் ஸ்டாப் அருகில் சுண்டக்காபாறை என்ற குண்டாங்கல் பாறை அமைந்துள்ளது. சுண்டக்காய் அமைப்பில் உள்ளதால், அந்த பெயரில் பாறை அழைக்கப்படுகிறது. அங்குள்ள, ஒரு சிறு குன்றின் முகட்டின் மீது, முட்டை வடிவில் குண்டாங்கல் பாறை அமைந்துள்ளது. 30 அடி உயரமுள்ள குண்டாங்கல், உயரம் குறைவான சிறு குன்றின் மீது அமைந்திருக்கிறது. குண்டாங்கல்லோட கிழக்கு முகத்தில், 20 அடி உயரத்தில் செவ்வக வடிவத்தில, 4 அங்குல ஆழத்திற்கு வெட்டப்பட்டு அதில், வர்த்தமானர் மஹாவீரர் பத்மாசன தியான கோலத்தில் அமர்ந்திருப்பதையும், அவரோட தலைக்கு மேல் முக்குடைகளும், தலைக்கு பின்னாடி ஒளிவட்டம் இருக்கும்படியாகவும் கலைநயத்தோடு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மஹாவீரருக்கு இருபுறமும், மலர் ஏந்திய இரண்டு பெண்களுடன், இரண்டு ஆண்கள் அவரை போற்றியபடி உள்ளனர். அவர்களுக்கு மேல், இரண்டுபேர் மலர்களை துாவி வழிபடுவது போலவும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். இப்போது, இருக்கிற நவீன கருவிகள் அந்த காலத்தில இல்லாதபோதே, இந்த சிற்ப தொகுதியின் விளிம்புகள் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. இந்த சிற்பங்கள், கி.பி. 4-ம் நுாற்றாண்டாக இருக்கலாம்னு என, வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.எழில் மிகுந்த சிற்ப தொகுதியை தாங்கியுள்ள குண்டாங்கல்லுக்கு கீழ், சமணத் துறவிகள் படுப்பதற்காக மிக நேர்த்தியாக செய்யப்பட்ட, ஐந்து சமணர் படுக்கைகள் உள்ளன. மலையின் மீது வட்ட வடிவில் கிணறு போன்ற இயற்கை மழைநீர் சேமிப்பு சுனை ஒன்றும் உள்ளது. இதை, சமண துறவிகள் குடிநீருக்காக பயன்படுத்தியுள்ளனர்.இத்தகைய சிறப்புவாய்ந்த குண்டாங்கல் பாறை, தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், தகுந்த பாதுகாப்பு இல்லாததால் சீரழியும் நிலையில் உள்ளது. மேலும், மது அருந்துபவர்களின் புகலிடமாகவும், அந்த பாறையில் பெயர்களை கிறுக்குபவர்களின் கூடாரமாகவும் மாறி கொண்டிருக்கிறது. எனவே, வரலாற்று சின்னம் அழியும் அபாயத்தை நோக்கி செல்கிறது.--