தியாகிகளின் வாரிசுதாரர் பட்டா கேட்டு அலைக்கழிப்பு
சேலம், சுதந்திர போராட்ட வீரர்களின் வழித்தோன்றல் வாரிசுகள் நலச்சங்கம் சார்பில், சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள நினைவு ஸ்துாபிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.தலைவர் ஞான சிவபிரகாசம் தலைமையில் செயலர் ஜான்சிராணி, பொருளாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட உறுப்பினர்கள், ஸ்துாபிக்கு மலர் துாவினர்.இதுகுறித்து ஞான சிவபிரகாசம் கூறியதாவது:சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள், 20 ஆண்டாக வீட்டு மனை பட்டா கேட்டு போராடி வருகிறோம். இதுவரை வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறோம். வீட்டு மனை பட்டா கேட்டு, கலெக்டர், முதல்வர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பலமுறை மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை.இந்த சுதந்திர தின விழா நாளிலாவது, அரசு காது கொடுத்து கேட்டு, நுாற்றுக்கணக்கான தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.