கல்குவாரியில் மூழ்கடித்து இரு மூதாட்டியர் கொலை
சேலம்: சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, துாதனுார் காட்டுவளவை சேர்ந்த அண்ணாமலை மனைவி பெரியம்மா, 65; இ.காட்டூர் மாரிமுத்து மனைவி பாவாயி, 70; நேற்று முன்தினம் இருவரும் ஆடு மேய்க்க சென்றனர். இரவு வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடினர். இந்நிலையில், நேற்று காலை, துாதனுார் காட்டுவளவு கல்குவாரியில், இருவரின் சடலமும் மிதந்தது. மகுடஞ்சாவடி போலீசார் இரு சடலங்களையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் கூறுகையில், 'மூதாட்டியர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி, கால் காப்பு காணாமல் போயுள்ளது. கல்குவாரி அருகே வெள்ளாளபுரத்தை சேர்ந்த அய்யனார் என்பவர் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். அவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால், அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. நகைக்காக இரு மூதாட்டியரும் கொலை செய்யப்பட்டு, கல்குவாரியில் வீசப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது' என்றனர்.