காவிரியில் நீர்வரத்து 50,000 கன அடி ஒகேனக்கல்லில் 2வது நாளாக தடை
ஒகேனக்கல், காவிரி நீர்பிடிப்பு பெய்து வரும் மழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, தேன்கனிக்கோட்டை, தொட்டமஞ்சி பகுதிகளிலும் மழை கொட்டுவதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 50,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் இரண்டாவது நாளாக நேற்றும் காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடையை நீடித்தது.