2600 ஆண்டுக்கு முற்பட்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு
சிவகங்கை,: சிவகங்கை மாவட்டம் இலந்தக்கரை கண்மாய் பகுதியில் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகம் இருந்ததற்கான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், ஜாடி குமிழிகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.காளையார்கோவில் அருகே இலந்தக்கரையில் வரலாற்று பேராசிரியர் பாலசுப்பிரமணியன், ஆர்வலர் ரமேஷ் ஆகியோர் கண்மாய் பகுதியில் ஆய்வு செய்தனர்.அவர்கள் கூறியதாவது:இங்கு தமிழர்கள் பண்பாடு, நாகரிகம், கலாசாரம், கலை அடிப்படை வசதிகளுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது. இலந்தக்கரை, பகையஞ்சான் எல்லை பகுதியில் கலைநயமிக்க மண்பாண்ட பானை ஓடுகள், இரும்பு எச்ச உலோகங்கள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், ஜாடி குமிழிகள், பாசிகள், கைவினை பொருட்கள், வட்ட சில் போன்றவை கண்டெடுத்துள்ளோம். இது 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது.கலைநயமிக்க கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், அவற்றின் வெளியே கீறல் கோடுகள் வரையப்பட்டுள்ளன. சுடு மண்ணால் ஆன வட்ட சில் மூலம் பாரம்பரிய விளையாட்டும் இருந்துள்ளது. இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தொழில், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.மற்றொரு 'கீழடி'யாக விளங்கும்இக் கிராமம் மட்டுமின்றி நல்லேந்தல், புரசடைஉடைப்பு போன்ற பகுதி கண்மாய்களில் கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் காணப்படுகின்றன. இங்கு, அரசின் தொல்லியல் துறையினர் அகழாய்வு மேற்கொண்டால் சிவகங்கை மாவட்டத்தின் மற்றொரு 'கீழடி' தோன்றுவது உறுதி. இதன் மூலம் பண்டைய தமிழர்கள் குறித்த பல்வேறு விபரங்களை அறிய வாய்ப்பு ஏற்படும் என்றனர்.