| ADDED : ஜூலை 12, 2024 04:38 AM
காரைக்குடி: விஜயவாடாவில் இருந்து காரைக்குடி வழியாக இலங்கைக்கு 124 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற வழக்கில்மேலும் ஒருவரை போலீசார் கைதுசெய்தனர். காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி எஸ்.ஐ., பிரேம்குமார் பாதரக்குடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு கார் மற்றும் பைக்கில் நின்று கொண்டிருந்தவர்கள் போலீசை பார்த்ததும் தப்பி ஓடினர். சந்தேகம் அடைந்த போலீசார் அருகில் உள்ள பாலத்தின் கீழே சென்று பார்த்த போது, 62 பண்டல்களில் 124 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட, விஜயவாடாவைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்ததோடு ஒரு கார், பைக் மற்றும் 5 அலைபேசி மற்றும் 124 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இக்கடத்தலில் சம்பந்தப்பட்ட திருச்சி தில்லை நகர் ரகுமானியா புரத்தைச் சேர்ந்த குலாம் முகமது மகன் அப்துல் ரகுமான் 23 என்பவரை போலீசார் கைது செய்துஉள்ளனர். கஞ்சா கடத்தி வரும் காருக்கு முன்பாக, வேறொரு காரில் சென்று, செக்போஸ்ட் ஏதேனும்உள்ளதா, போலீசார் யாரும் சோதனை செய்கிறார்களா என்று நோட்டமிட்டு பின்னால் வருபவர்களுக்கு தகவல் சொல்லும்நபராக செயல்பட்டுஉள்ளார். அவரிடமிருந்து,கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.