உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடியில் தொல்லியல் துறை ஆணையர் ஆய்வு

கீழடியில் தொல்லியல் துறை ஆணையர் ஆய்வு

கீழடி: கீழடியில் குறைந்த அளவு தொழிலாளர்களுடன் அகழாய்வு பணி நடைபெறுவதாக தினமலர் இதழில் செய்தி வெளியானதையடுத்து நேற்று தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் ஆய்வு மேற்கொண்டார்.சிவகங்கை மாவட்டம் கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு ஜூன் 18ம் தேதி இரண்டு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தொடங்கின.இதில் பாசிகள், கண்ணாடி மணிகள், தா என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஒடு, மீன் உருவம் பதித்த பானை ஓடு உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. கீழடியில் ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு ஜூனில் பணிகள் தொடங்கிய நிலையில் இரண்டு குழிகள் மட்டுமே தோண்டப்பட்டு பணிகள் நடந்தன. மேலும் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்படும் என கலெக்டர் ஆஷாஅஜித் தெரிவித்து இருந்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்தன.இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து நேற்று தமிழக தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம் நேரில் ஆய்வு மேற் கொண்டதுடன் இதுவரை கண்டறியப்பட்ட பொருட்களையும் பார்வையிட்டார்.அகழாய்வு தளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்ட அவர் கூடுதல் குழிகளை தென்புறத்தில் இருந்து தொடங்க வலியுறுத்தியுள்ளார். அகழாய்வு நடந்து வரும் குழிகளில் சரிந்த நிலையில் கூரை ஓடுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்ட நிலையில் தென்புறம் அதன் தொடர்ச்சி இருக்க வாய்ப்புண்டு என்பதால் அப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார். கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் இதுவரை நடந்த அகழாய்வு பணிகள் குறித்து விளக்கமளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை