சிவகங்கை புத்தகத்திருவிழா மேடையில் டான்ஸர் பலி
சிவகங்கை:சிவகங்கையில் நடக்கும் புத்தகத்திருவிழாவில் நடனமாடிய நடனக்கலைஞர் திடீரென மயங்கி விழுந்து இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.சிவகங்கை மன்னர் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத்திருவிழா பிப்.,21-ல் தொடங்கி நடந்து வருகிறது. தனியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தினமும் காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நேற்று மாலை நடந்த கலை நிகழ்ச்சியில் நடனக்கலைஞரும், நடன ஆசிரியருமான சிவகங்கை அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த முருகையா மகன் ராஜேஷ்கண்ணன் 55, நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.விழாக்குழுவினர் அவரை 108 ஆம்புலன்ஸில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.