| ADDED : ஜூலை 23, 2024 05:20 AM
சிவகங்கை: அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சு போட்டிகள் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கும், அனைத்து கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட உள்ளது. சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி கருத்தரங்கு கூடத்தில் இப்போட்டிகள் நடத்தப்படும். ஆக., 7 மற்றும் 8 ஆகிய இரு நாட்கள் போட்டி நடக்கும். பள்ளி மாணவர்களுக்கு காலை 9:00 மணிக்கும், கல்லுாரி மாணவர்களுக்கு மதியம் 2:00 மணிக்கும் போட்டிகள் துவங்கும். இதில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்படும். அரசு பள்ளிகளை சேர்ந்த சிறந்த இரு மாணவர்களுக்கு சிறப்பு பரிசு தொகை ரூ.2,000 மற்றும் பாராட்டு சான்றும் வழங்கப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர், கல்லுாரி முதல்வர்களின் பரிந்துரை கடிதத்துடன், சிவகங்கை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும், என்றார்.