திருப்புவனத்தில் அடிக்கடி மின்வெட்டு
திருப்புவனம் : திருப்புவனத்தில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மின் வெட்டு நிகழ்வதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.திருப்புவனத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதுதவிர தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சாலையின் இருபுறமும் 200க்கும் மேற்பட்ட கடைகள், வங்கிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் ஐந்திற்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் செயல்பட்டு வருகின்றன.நெல்முடிக்கரை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு வார மாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கான காரணம் என்ன, எப்போது மீண்டும் வரும் என எந்த தகவலும் தெரியாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.இதுதவிர சமூக வலை தளங்களில் பலரும் அதிகாரமற்ற முறையில் நாளை பராமரிப்பு பணி என்பதால் பகல் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படும் என தகவலை பகிர்கின்றனர். பெரும்பாலான திருமணங்கள் கோயில்களில் நடைபெறுகின்றன.கோயில்களில் ஜெனரேட்டர் வசதி இல்லாத நிலையில் கோயிலில் ஏற்றி வைக்கப்பட்ட தீபங்களின் வெளிச்சத்தில் திருமணங்கள் நடந்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.