ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், செவிலியர் பற்றாக்குறை
இளையான்குடி: தாயமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள்,செவிலியர் பற்றாக்குறையாலும் ஜெனரேட்டர் இல்லாததாலும் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தாயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிராந்தமங்கலம்,சாத்தமங்கலம், செந்தமிழ் நகர், கண்ணமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.இம்மருத்துவமனையில் 2க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் தற்போது ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதாலும், 4க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இருக்க வேண்டிய நிலையில் ஒரு செவிலியர் மட்டுமே பணியில் இருப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நோயாளிகள் கூறியதாவது: இம்மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் மட்டுமே பணியில் இருப்பதால் நோயாளிகளை தொட்டுக் கூட பார்க்காமல் சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் செவிலியர்கள் இல்லாத நிலையில் துணை சுகாதார செவிலியர்கள் இங்கு பணியில் உள்ளனர். அவர்களிடம் சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டால் உதாசீனப்படுத்தி வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படும் நேரத்தில் ஜெனரேட்டர் இல்லாததால் சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.