கோட்டையூர் அருகே 50 மாடுகள் மாயம்
காரைக்குடி : கோட்டையூர் அருகே உள்ள வேலங்குடியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் மாயமானதாக கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர். கோட்டையூரில் உள்ள வேலங்குடி பகுதியில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்குள் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் திருடப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில்: வேலங்குடி ஆவுடைபொய்கை சாலையில் மாடுகள் மேய்ந்து வீடு திரும்பும். மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் தொடர்ந்து மாயமாகி வருகிறது. இதுவரை, 150க்கும் மேற்பட்ட மாடுகள் மாயமாகியுள்ளது. போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த சில வாரங்களில் 50க்கும் மேற்பட்ட மாடுகள் திருடப்பட்டுள்ளது. இறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படுகிறது. போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளோம். போலீசார் கூறுகையில்: கால்நடை வளர்ப்பவர்கள் பால் கறக்கும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். நள்ளிரவில் சிலர் வந்து மாடுகளை கடத்திச் செல்கின்றனர். புகார் வந்துள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.