பா.ஜ., வர்த்தக பிரிவு செயலாளர் கொலையில் தலைமறைவானவர் கைது
சிவகங்கை: சிவகங்கை பா.ஜ., வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் கொலையில் 2 மாதமாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் நேற்று மதுரையில் கைது செய்தனர். பா.ஜ., வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் 51. சிவகங்கை வாரச்சந்தை நகராட்சி கடையில் டூவீலர் மெக்கானிக் ஷாப் நடத்தி வந்தார். இவரிடம் மணிபாரதி என்பவர் பணிபுரிந்தார். மெக்கானிக் ஷாப் அருகே உள்ள ரூமில் இருவரும் தங்கியிருந்தனர். அந்த அறைக்கு அருகே டிரம்செட் வாசிக்கும் பணியில் உள்ள திருப்புத்துார் அருகே வடவன்பட்டி செந்தமிழ்செல்வன் 19, திருப்புத்துார் குறிஞ்சி நகர் ஆனந்த் 19, மதுரை அருகே பட்டூர் அன்பரசன் 25, பூபதி என்ற வாண்டு 19, இவரது சகோதரர் கண்ணன் 20, உட்பட சிலர் தங்கியிருந்தனர். ஆக.,28 இரவு 11:30 மணிக்கு அனைவரும் மது அருந்தினர். இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மணிபாரதியை டிரம்செட் வாசிக்கும் குழுவினர் தாக்கினர். இதை விலக்க வந்த சதீஷ்குமாரை, இக்கும்பல் தாக்கி தள்ளிவிட்டதில் கீழே விழுந்து காயமுற்றார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதில் தொடர்புடைய 7 பேரை நகர் போலீசார் ஏற்கனவே கைது செய்த நிலையில் 2 மாதமாக தலைமறைவாக இருந்த மதுரை மாவட்டம் அழகர் கோவில் கோட்டைவாசல் கார்த்திக் 21, என்பவரை நேற்று மதுரையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், எஸ்.ஐ., செல்வபிரபு தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.