ரோட்டின் நடுவில் மின்கம்பம் வாகனம் வர முடியாத அவலம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ரோட்டின் நடுவில் நிற்கும் மின் கம்பங்களால் ஆட்டோ கூட வர முடியாமல் குடியிருப்பவர்கள் தவிக்கின்றனர்.இப்பேரூராட்சியில் வடக்கு வேளார் தெரு, மீனாட்சி நகரை இணைக்கும் சாலையின் நடுவே இரண்டு இடங்களில் மின்கம்பங்கள் உள்ளது. பல ஆண்டுகளாக இவை போக்குவரத்து இடையூறாக இருக்கும் நிலையில் மூன்று தெரு மக்கள் அவதிப்படுகின்றனர்.குறிப்பாக மீனாட்சி நகர், வடக்கு வேளாளர் தெருவில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆட்டோ கூட வர முடியாத அளவில் சிரமமாக உள்ளது.இச்சாலையில் ஆக்கிரமிப்புகளும் சில இடங்களில் உள்ள நிலையில் டூவீலர் செல்வதற்கும் சிரமமாக உள்ளது.இந்த இரு மின்கம்பங்களையும் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத இடத்தில் மாற்றி நட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறது.ஆனால் மின்வாரிய அதிகாரிகளோ மனு அளிப்பவர்களை பணம் கட்டி மாற்றிக் கொள்ள வலியுறுத்துகிறார்கள். பேரூராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.