கீழடி அகழாய்வு தகவல்களை வெளியிடாத தொல்லியல் துறை
கீழடி:தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடக்கும் அகழாய்வு குறித்த எந்த வித தகவலையும் தொல்லியல் துறையினர் வெளியிட மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கீழடியில் நான்காம் கட்டம் முதல் தற்போது பத்தாம் கட்ட அகழாய்வு வரை தமிழக தொல்லியல் துறை பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடி அகழாய்வு தளத்திற்கு தனியாக ரமேஷ் என்பவர் இயக்குனராகவும், அஜய் என்பவர் இணை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டனர். கீழடியில் நடக்கும் அகழாய்வு குறித்து இருவரும் எந்த தகவலும் தெரிவிப்பதில்லை.தமிழக தொல்லியல் துறை ஆணையாளரான சிவானந்தத்திடம் கேட்டாலும் எந்த தகவலையும் தெரிவிப்பதில்லை.கீழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட தளங்களில் நடத்தப்பட்ட அகழாய்வு குறித்து இதுவரை தமிழக தொல்லியல் துறை எந்த வித செய்தியும் வெளியிடவில்லை. அகரம், மணலுாரில் அகழாய்வு நிறுத்தப்பட்டது குறித்தும் பத்தாம் கட்ட அகழாய்வு பாதியில் நிறுத்தப்பட்டது குறித்தும் இன்று வரை தமிழக தொல்லியல் துறை எந்த வித அறிக்கையும் அளிக்கவும் இல்லை. எட்டு மாதங்களுக்கும் மேலாக கீழடியில் அகழாய்வு நிறுத்தப்பட்டது குறித்து விளக்கமும் அளிக்கவில்லை. இந்தாண்டு 11ம் கட்ட அகழாய்வு நடக்குமா என்றும் தெரியவில்லை. தமிழக அரசு கீழடியில் அகழாய்வு நடைபெறுமா இல்லையா என தெளிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்களிடம் ஏற்பட்டுள்ளது.