கலைத்திருவிழாவா... காலாண்டு தேர்வா... குழப்பத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள்
காரைக்குடி: தமிழகம் முழுவதும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு தொடங்கப்படவுள்ள நிலையில், கலைத் திருவிழா போட்டி பதிவேற்றப் பணியால் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. கலைத் திருவிழாவில் நடனம், ஓவியம், கதை கூறுதல் மாறுவேடம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறும். வட்டார வள மையத்தில் நேரடியாக நடந்த இப்போட்டிகள் கடந்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடந்து வருகிறது. இவ்வாண்டு கலைத் திருவிழாவில் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது.இவ்வாண்டு இப்போட்டிகள் வட்டார வள மையத்தில் நேரடியாக நடைபெறும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பிறகு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போட்டோ பதிவேற்றம் செய்தால் போதும் என்று அறிவிப்பு வெளியானது.சிறிது நேரத்திலேயே வீடியோ பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு நேரத்திற்கு ஒரு உத்தரவு வந்ததால் தலைமை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர். மேலும் காலாண்டு தேர்வு நெருங்கி வரும் வேளையில் இதுபோன்று கலைத் திருவிழாவால் மாணவர்களின் கல்வி தரமும் குறைய வாய்ப்புள்ளதாக பெற்றோர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.கடைசி தேதி செப். 12 என்று அறிவிக்கப்பட்டு பதிவேற்ற பணியும் முடிந்து விட்டது. இந்நிலையில், தற்போது கலைத் திருவிழா போட்டி பதிவேற்ற கடைசி தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவேற்ற கடைசி தேதி செப்.27 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காலாண்டு தேர்வும் தற்போது தொடங்கப்படவுள்ளது. இதனால் கலைத் திருவிழாவா, காலாண்டு தேர்வா என மாணவர்களும் பள்ளி தலைமை ஆசிரியர்களும் குழம்பி வருகின்றனர்.மேலும், கலைத் திருவிழா போட்டியில் பல்வேறு குழப்பங்களும் சந்தேகங்களும் எழுந்து வருவதோடு தேர்வு நேரத்தில் கலைத் திருவிழா நடத்துவதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.