ரூ.9 லட்சத்தை திருப்பி தராத நாடக நடிகை மீது வழக்கு
சிவகங்கை:சிவகங்கையில் ரூ.9 லட்சத்தை பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றிய திருச்சி மாவட்ட நாடக நடிகை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சிவகங்கை நேருபஜாரைச் சேர்ந்தவர் முகமது நபி 55. இவர் 25 ஆண்டுகளாக அபுதாபியில் வேலை செய்து வருகிறார். முகமது நபி கடந்தாண்டு மார்ச்சில் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மண்பாதை சமத்துவபுரத்தைச் சேர்ந்த நாடக நடிகை அம்பிகாவுடன் 40, அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்பழக்கத்தில் முகமது நபி அபுதாபியில் இருந்து பல தவணைகளாக ரூ.9 லட்சத்து 5 ஆயிரத்தை அவருக்கு அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அம்பிகா அதை திருப்பித்தரவில்லை. முகமது நபி சிவகங்கை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எண் 1 )வழக்கு தொடர்ந்தார். நீதிபதி உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் அன்னராஜ் நாடக நடிகை அம்பிகா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.